கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்களுக்கு தடுப்பு காவல் உத்தரவு

கிரிந்த பகுதியில் பெருமளவான ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 7 நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேக நபர்கள் நேற்று (12) மாலை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது .

சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிரிந்த பகுதியில் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 345 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் நேற்று ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட போதைப்பொருள், டுபாயில் பதுங்கியுள்ள திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான, திக்கவெல்ல ‘ரன் மல்லி’ என்பவருக்கு சொந்தமானது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.