கிரான் பிரதேச செயலகப்பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாய கிராம மக்களுக்கு ‘பாம்’ நிறுவனத்தினால் ஒரு தொகுதி நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கான அதிகாரி எஸ்.சிற்றம்பலம், பாம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுனில் டொம்பேபொல, அதன் வெளிக்கள உத்தியோகஸ்த்தர்களான திருமதி.பிரியதர்சினி சந்திரலிங்கம். ரஞ்சித்குமார், சர்மிலா ஆகியோர்களுடன் கிராமசேவகர்களும் கலந்து கொண்டு மக்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

குறித்த நிவாரணப் பொதிகளானது கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை, கோராவெளி, குடும்பிமலை, முறுத்தானை ஆகிய 4 கிராம சேவகர் பிரிவுகளில் 6 கிராமங்களைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு 5000 ரூபா பெறுமதியில் வழங்கப்பட்டது.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர்.

அந்த வகையில் மேற்படி கிராம மக்களுக்கு உதவிடும் வகையில் இவ் மனிதநேய உதவி மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின்படி வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான நிதி அனுசரணையினை அமெரிக்க நாட்டின் ‘வேள்ட்’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.