
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு ரூபா 4.5 லட்சம் பெறுமதியான அன்பளிப்பு
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கத்தார் நாட்டில் பணிபுரியும் காத்தான்குடி சமூக அமைப்பினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 5 மணிக்கு பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கு தேவையான இருக்கைகள் ஒரு தொகுதியினை அன்பளிப்பாக பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரியினுடைய புதிய கேட்போர் கூடம் இருக்கைகள் இல்லாததன் காரணமாக முறையாக பயன்படுத்த முடியாத ஒரு நிலை காணப்பட்டு வந்தது.
மாணவர்களுக்கான பிரத்தியேக கருத்தரங்குகள், பெற்றோர் ஒன்றுகூடல் மற்றும் மாணவர்களுடைய கலை நிகழ்வுகள் போன்ற செயற்பாடுகளை கேட்போர் கூடத்தில் நடத்துவதற்கு இவ் இருக்கை வசதிகள் பயனுள்ளதாக காணப்பட்டு வருகிறது.
காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ. சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் பொறியியலாளர் எம்.எம்.பழுலுல் ஹக், செயலாளர் ரிபாய் கலீல், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளர் கலந்தர் லெவ்வை, பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கத்தாரில் பணிபுரியும் சகோதரர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
