களனி கங்கை ஆற்றுப்படுகையில் அபாயகரமான வெள்ள நிலைமை
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், ஹங்வெல்ல மற்றும் அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளில் தற்போது உச்ச வெள்ள நிலைமை காணப்படுகிறது.
ஹங்வெல்ல அளவீட்டு நிலையத்தில் நீர் மட்டம் 9.78 மீட்டர் எனப் பதிவாகியுள்ளதுடன், இது ஏறக்குறைய ஒரு பெரும் வெள்ள நிலைமை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
நாகலகம் வீதியில் உள்ள அளவீடு 8.35 அடியாக காணப்படுவதுடன், இது அண்மைய வரலாற்றில் பதிவான அதிகபட்ச நீர் மட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நீர் மட்டம் அதே மட்டத்தில் காணப்படுவதாகவும், நீர் மட்டம் மேலும் அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்த அவர், களனி விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ள அணை தற்போது திட்டமிடப்பட்ட நீர் மட்டத்தின் அதிகபட்ச உச்ச அளவை அடைந்துள்ளது.
எதிர்காலத்தில் ஏதாவது ஆபத்து ஏற்படின், உடனடியாக அறிவிக்க எதிர்பார்ப்பதால், வெள்ள அணைக்கு அருகில் வசிக்கும் அனைவரும் அந்த அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
