
பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து, ஆசிரிய பணிபுரிந்து வருகின்ற பட்டதாரிகளது, நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுக்கப்பட்டு, பாடசாலைகளில் இருந்து ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று செவ்வாய்க்கிழமை, மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தலைமையில், பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணிபுரிந்து வருகின்ற பட்டதாரிகள், மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்திற்கு வருகை தந்து, மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.இஷதீனிடம், தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணி புரிந்து வருகின்ற பட்டதாரிகளால் போடப்பட்ட வழக்கு முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாகவும், இவர்களுக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது, என பிரதமர் பாராளுமன்றில் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வினை பெற்றுத்தருமாறு இவர்களால் முன்வைக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
