
கல்முனை நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் தப்பியோட்டம்
-அம்பாறை நிருபர்-
நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற நிலையில் தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபரே இதன்போது தப்பி சென்றுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று வியாழக்கிழமை குறித்த சந்தேக நபரை நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த சந்தேக நபருக்கு பிணையாளிகள் இன்மையினால் நீதிமன்ற உள்ளக வளாகத்தில் உள்ள சிறை கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதன்போது குறித்த சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி நீதிமன்ற சுவரை தாண்டி சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டில் குறித்த சந்தேக நபர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.