கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை பூஜை

-திருகோணமலை நிருபர்-

தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றை 50 வருடங்களுக்கு மேலாக பராமரித்து வந்த உப்புவெளி பிரதேச சபைக்கு வழங்குமாறு கோரி கோரிக்கைகளும், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இம்முறை ஆடி அமாவாசை நடாத்துவதற்கு அனுமதி வழங்குமாறு தொல்பொருள் திணைக் களத்திற்கும், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் சமூக அபிவிருத்தி கட்சியின் ஊடாக அதன் செயலாளர் குகதாஸ் பிரகாஷ் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றினை முன் வைத்தார்.

இந்நிலையில், இக் கோரிக்கையை கவனத்தில் கொண்டு இவ்வருடம் கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த மூன்று வருடங்களாக கன்னியா சிவன் ஆலயம் மற்றும் பிள்ளையார் ஆலயம் போன்றவற்றை தரிசிப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்காத நிலையில் இந்துக்களுக்குச் சொந்தமான பலவிதமான நிகழ்வுகள் கடந்த காலங்களில் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் இம்முறை விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஆடி அமாவாசை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது இம்முறை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் டி. தனேஸ்வரன் திருகோணமலை தமிழர் சமூகத்தின் பிரதிநிதி நிக்கலஸ் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172