காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆனதாஸ் (வயது – 38) என்கின்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த மீனவர் மணல்காடு பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் கட்டுமரத்தில் மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார்.
வழமையாக காலை 9 மணியளவில் கரை திரும்பும் குறித்த மீனவர் அன்று கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை ஆளின்றி அவர் பயணித்த கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு குறித்த மீனவரின் கட்டுமரத்துடன் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
மேலும் இரண்டு நாட்கள் சுழியோடிகள் உதவியுடன் காணாமல்போன மீனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.