எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி வியாபாரிகள் பாதிப்பு

-மன்னார் நிருபர்-

நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள அநேக உணவகங்கள் உட்பட சிற்றுண்டி வியாபார நிலையங்களும் நீண்ட நாட்களாக மூடிய நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில், உணவகங்களில் நாட்கூலி தொழிலாளர்களாக பணிபுரியும் பலர் வேலை இழந்துள்ளதுடன், பலர் சொந்த மாவட்டங்களுக்கு போக முடியாத நிலையில் பணி புரியும் உணவகங்களில் தங்கியுள்ளனர்.

அதே நேரம், மாலை நேரங்களில் சிற்றுண்டி வியாபாரங்களில் ஈடுபடும் பல வியாபாரிகள் எரிவாயு தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.

சிற்றுண்டிகளை வீடுகளில் இருந்து விறகு அடுப்புக்களில் தயார் செய்ய வேண்டி வருவதாகவும், வீடுகளில் இருந்து தயார் செய்து விற்பனை செய்வதை மக்கள் கொள்வனவு செய்வது குறைந்துள்ளதாகவும், சிற்றுண்டி வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, விரைவில் அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் இவ்வாறான தொழிலாளர்களுக்கு எரிவாயுவை வழங்குமாறும், சிற்றுண்டி வியாபாரிகள் மற்றும் உணவக நாட்கூலி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.