-நுவரெலியா நிருபர்-
எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசரும், முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில், குழந்தை ஒன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலன்னாவை எரிபொருள் விநியோக நிலையத்திலிருந்து, கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் சேமிப்பு வளாகத்திற்கு, எரிபொருள் ஏற்றிச் சென்ற பெளசர், முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை காயமடைந்து, வட்டவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
செனன் தோட்டத்தில் இருந்து, ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியினை, அதே திசையில் பயணித்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பெளசர் , முந்திச் செல்ல முயன்றபோது, பெளசரின் பின்புற உலோகப் பகுதி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும், பெளசரில் இருந்து எரிபொருளை இறக்கிய பின்னர் சாரதி கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.