இலங்கைக்கு கடத்த இருந்த 260 கிலோ கேரளகஞ்சா பறிமுதல் : மூவர் கைது

-மன்னார் நிருபர்-

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறு காட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சா மூட்டைகளுடன் நேற்று வியாழக்கிழமை  இரவு மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு கடல் வழியாக கேரள கஞ்சா கடத்தப்பட உள்ளதாக வேதாரண்யம் கடலோர காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் குமாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை  இரவு குறித்த பகுதிக்குச் சென்ற வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் செல்வராசு தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 09 சாக்கு மூட்டைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது அதில் கேரள கஞ்சா உள்ளமை தெரிய வந்தது.

வாகனத்தை ஓட்டி வந்த ஆறு காட்டுத்துறை, சுனாமி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள் ஆறுகாட்டுத்துறை வடக்குத் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

இந்த நிலையில் குறித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளதோடு, மேலும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த பரமத்தி வேலூர் இலங்கை அகதி முகாமில் உள்ள காந்தரூபன் என்பவரையும், சந்தேகத்தின் பேரில் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணைகளின் போது 9 சாக்கு மூட்டைகளில் இருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 260 கிலோ கேரள கஞ்சா இலங்கைக்கு கடத்த இருந்தமை தெரியவந்தது.

வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.