
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்த்தானிகராலயத்தின், வளர்ச்சி ஒத்துழைப்புக்கான செயலாளர் (development corporation) ஆர்.அசோக் குமார் மூதூர் தள வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்கிழமை வருகை தந்தார்.
இதன்போது, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை நிதியில் சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள கண், காது, மனநல பிரிவுக்கான இடத்தை பார்வையிட்டதுடன் வைத்தியர்களிடம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
“இந்தியா அரசாங்கமானது கிழக்கு மாகாணத்தில் 33 வெவ்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இதற்காக 2334 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டங்களில் பெரிய வேலைத்திட்டம் இந்த வைத்தியசாலையிலேயே முன்னெடுக்கப்பட உள்ளது, அதற்கான கள ஆய்வு செய்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.
இந்த வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்திய இலங்கை அரசாங்கத்திற்கிடையிலான ஒப்பந்த முடிவடையும் தருவாயில் உள்ளது. மூன்று மாதங்களுக்கிடையில் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிப்போம் எனவும், தெரிவித்தார்.
