இயற்கைக்கு மாறான மரணம் அடைந்த இளம் நடிகை அபர்ணா நாயர்

பல மலையாள சீரியல்கள் மற்றும் தமிழில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை அபர்ணா நாயர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இவர் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் இவரது உடலை கைப்பற்றிய பொலிஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

அபர்ணா நாயர் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சீரியல் மட்டும் இன்றி, 2009 ஆம் ஆண்டு ‘மேகதீர்த்தா’ என்கிற மலையாள படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ‘கோடாடி சமக்ஷம் பாலன் வக்கீல்’, ‘கல்கி’, ‘அச்சாயன்ஸ்’, ‘முத்துகௌ’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் தமிழில்… ‘ரன் பேபி ரன்’, ‘எதுவும் நடக்கும்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அபர்ணா நாயர் மலையாளத்தில் ‘ஆத்மசகி’, ‘சந்தனம்’, ‘தேவஸ்பர்ஷம்’ மற்றும் ‘மைதிலி இஸ் பேக்’ போன்ற ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நடந்த போது வீட்டில் அவரது தாயும் சகோதரியும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அபர்ணாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அபர்ணா முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகையின் உடலை பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில், உறவினர்களிடம் நடிகை பற்றிய தகவல்களை வாக்கு மூலமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

அபர்ணா நாயர் சஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு த்ராயா மற்றும் கிருத்திகா என்ற குழந்தைகள் உள்ளனர். பல சீரியல்களில் மிகவும் பிசியாக நடித்து வந்த அபர்ணாவின் மறைவு மலையாள ரசிகர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.