-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு, இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் பி.ஆர் இஸ்மாத் ஜெமில் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த 12 இந்திய மீனவர்கள் தொடர்பிலான குற்றச் சாட்டு பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தமை, இழுவை மடி வலைகளை உடமையில் வைத்திருந்தமை, இழுவை மடி வலைகளை பயன்படுத்தி தொழில் மேற்கொண்டது, ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, குறித்த மீனவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனையை விதித்து விடுதலை செய்தார்.
அத்துடன் படகு உரிமம் தொடர்பிலான விளக்கத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது.
இதே நேரம், வழமை போன்று இன்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றில் சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.