இந்தியாவின் ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60 சதவீத வாக்கு பதிவு

இந்தியாவின் நடைபெற்ற ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60 சதவீத வாக்கு பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கடந்த மே இருபதாம் திகதியன்று ஐந்தாம் கட்ட தேர்தல் 49 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏழு தொகுதிகளுக்கும், பீகார் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கும் , ஜார்கண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கும் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள தலா ஒரு தொகுதிகளுக்கும் என மொத்தம் 49 தொகுதிகளுக்கு காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் தேர்தல் ஆணையம் 60.‌48 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலை விட தற்பொழுது ஒரு சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு குறைவாக நடந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தொகுதிகளுக்கு 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் போது 61.82 சதவீத வாக்கு பதிவாகி இருந்தது.

ஆறாம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்