வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்த இரு சந்தேகநபர்கள் தடுப்பு காவலில்
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பகுதிகளை இலக்கு வைத்து இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு சந்தேகநபர்கள், பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதியின் உத்தரவின்படி, 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவார்கள் என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட போதே குறித்த பிரிவு, நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை தொடர்வதற்கு அனுமதி வழங்குமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசேட மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சுற்றுலாப் பிரதேசத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இருந்ததாக கூறப்படும் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்பான வழக்கில் விசேட பிரேரணையை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பான மேலதிக அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகள் மற்றும் விஷேட அறிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான், விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டு விசாரணைக் கோப்பை முடித்து வைத்தார்.