வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட் மற்றும் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட் மற்றும் மதுபான போத்தல்களை கடத்திய வர்த்தகர் இன்று திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 14, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் ஐந்து பயணப் பைகளுக்குள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் மற்றும் 125 போத்தல் மதுபானம் என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் உணவகங்களில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பொலிஸ் பொறுப்பதிகாரியின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.