வடக்கு சுகாதாரத்துறையில் இடம்பெறும் முறைகேடு

-யாழ் நிருபர்-

மந்திகை ஆதார வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடைப்பட்டதால் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று, யாழ்.பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி பழுதுபட்டமையல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஆறு மணித்தியாலங்களாக நோயாளர்கள் மற்றும் குழந்தை பிரசவித்த பெண்கள் மலசல கூடத்தைப் பயன்படுத்த நீரின்மையால் அவதிப்பட்டதாக வைத்தியசாலையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த வைத்தியசாலையில் நீர்த்தாங்கியில் சேமிக்கப்பட்ட நீரும் முடிவுற்ற நிலையில் இரவு 10 மணியைக் கடந்தும் நீர் விநியோகம் சீராக்கப்படவில்லை.

வடக்கு மாகாண சுகாதாரத் துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இருந்தும் ஒழுங்கான பராமரிப்பின்மையால் மின்சாரம் தடைப்பட்ட போது 3 நாட்களாக குறித்த வைத்தியசாலை இரவில் இருளில் மூழ்கியது.

குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.