ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-நுவரெலியா நிருபர்-

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில், ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேர ரயிலில், கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து, குறித்த நபர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவர் கொட்டகலை கங்கைபுரத்தை சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான வெள்ளசாமி ஜெயகுமார் (வயது 40), என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக,  ரயில் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறுதலாக ரயிலில் மோதுண்டு இறந்தாரா? என்பது தொடர்பாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.