யாழில் வன்முறை கும்பலின் அட்காசம்: நால்வர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வன்முறையிலும், அமைதியை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் இன்றையதினம் வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இரண்டு முச்சக்கர வண்டிகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று புதன் கிழமை நள்ளிரவு வன்முறை கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வுகள் நடைபெற்றன. இவ்வாறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு வந்த கும்பல் அங்கு அட்டகாசம் புரிந்துள்ளது.
குறித்த கும்பலானது முச்சக்கர வண்டியின் ஒரு சில்லினை தூக்கி ஆபத்தான முறையில் வீதியின் குறுக்காக செலுத்தியுள்ளது. அதன்பின்னர் குறித்த கும்பல் இளைஞர் ஒருவர் மீது, தலைக்கவசம், கையில் உள்ள பொருட்கள், கை, கால் என்பவற்றை பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.
இச் சம்பவம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தனபால ஆகியோரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரும் இணைந்து வன்முறை கும்பலை சேர்ந்த நால்வரை இன்றையதினம் கைது செய்தனர்.
மேலும் ஆபத்தான முறையில் வீதிக்கு குறுக்காக செலுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.