மூதூரில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் தொடர்பில் விசேட கூட்டம்
-மூதூர் நிருபர்-
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான டெங்கு கட்டுப்பாட்டு விசேட கூட்டம் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இவ்விசேட கூட்டம் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் அதிகளவு டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதோடு இதுவரை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 125 டெங்கு தொற்றாளர்கள் இணங்காணப்பட்டிருந்த பின்னணியில் இவ் விசேட கூட்டம் இடம்பெற்றது.
தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை இணங்கண்டு அழித்தல், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுதல், டெங்கு தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபையின் செயலாளர், மூதூர் சம்பூர் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், மூதூர் தள வைத்தியசாலை நிருவாகத்தினர், மூதூர் பிரதேச அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்