
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள்
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மாத்தறை சிறைச்சாலையிலிருந்த 26 பெண் கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு முற்பட்டபோது அங்கு நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது.
பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள் வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த 3 கைதிகளையும் வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு முற்பட்டபோது அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பின்னர் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் மாத்தறை சிறைச்சாலையில் காவல்துறையினரும், விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்