மட்டக்களப்பில் வாகன விபத்தில் ஒருவர் மரணம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் 4ஆம் குறிச்சியைச் சேர்ந்த சண்முகராசா சுதர்ஷன் (வயது – 37) என்பவரே பலியாகியுள்ளார்.

நகைக் கடை கூலித் தொழிலாளியான பலியானவருக்கு 4 வயதைக் கொண்ட ஒரு குழந்தையும் 6 மாத வயதைக் கொண்ட மற்றொரு கைக்குழந்தையும் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்துப் பற்றி மேலும் தெரியவருவதாவது,

சம்பவதினத்தன்று சுதர்ஷன், மோட்டார் சைக்கிளில் பிரதான வீதியால் சென்று கொண்டிருக்கும்வேளையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்தைக் கடக்கும்போது அந்த படி ரக வாகனத்தின் சாரதி திடீரென வாகனத்தின் கதவைத் திறந்துள்ளார். வாகனக் கதவின் பலமான தள்ளுகையினால் வீதியில் நிலை தடுமாறி விழுந்த அவரை பின்னால் வந்த மற்றொரு படி ரக வாகனம் ஏறி மிதித்துச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் உதவிக்கு விரைந்தோரினால் உடனடியாக எறாவூர் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளார்.

எனினும், சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று ஞாயிற்று கிழமை ஐயன்கேணி மணியபுரம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் சம்பந்தமாக படி ரக வாகனங்களின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ள பொலிஸார் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.