பிறந்த குழந்தையை கிணற்றுக்குள் வீசிய தாய் – புகைப்படம்(update)

-யாழ் நிருபர்-

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி, மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றில் பிறந்து ஒரு நாளான சிசுவின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தில் வேலை செய்வதற்காக இன்று காலை வந்தவர்கள் கிணற்றில் நீர் எடுக்க முற்பட்ட வேளை சிசுவின் சடலத்தை அவதானித்து கிராம சேவகர் மூலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த சிசு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இதே வேளை சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டலில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிசுவை பிரசவித்தவர் என சந்தேகிக்கப்படும் 43 வயதான, 3 பிள்ளைகளின் தாயான பெண் கிளிநொச்சி பகுதிக்கு தப்பிச்செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவி செய்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரியையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 வானொலி