
பாகிஸ்தான் பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியா தடை
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இருதரப்பு கடித போக்குவரத்து, இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில்,
பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களின் நேரடி அல்லது மறைமுக இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக, வழக்கமாக சுதந்திரமாக இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பிற விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் உட்பட அனைத்துக்கும் இது பொருந்தும். இந்தக் கட்டுப்பாடு இறக்குமதிக்கு மட்டுமல்ல, இந்தியா வழியாக செல்லும் பொருட்களுக்கும் பொருந்தும்.
இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கையை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையிலிருந்து விலக்கு வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.