
பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான வரையறை: தொழில்முறை இணைய ஊடக அமைப்பு
அரச தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுகின்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ள தொழில்முறை இணைய ஊடக அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைப்பின் தலைவர் பிரடி கமகே செயலாளர் கெழும் சிறிவன்த ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த தீர்மானம் பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகவும், மக்களின் தகவல் அறியும் உரிமையில் தலையிடுவதாகவும், நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும் என்று எங்கள் அமைப்பு கருதுகிறது.
செய்தி அறிக்கையிடல் மற்றும் தகவல் பரப்புதலில் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஊடகவியலாளர்களும் தகவல்களைப் பெற்று அவற்றை பொதுமக்களுக்கு பிழையின்றி விநியோகிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளனர். எனவே, அரசாங்க தகவல் திணைக்களத்தின் இந்த முடிவு எமது தொழில்சார் சகோதரர்களின் பணிகளுக்கு ஒரு தடையாகவும் பத்திரிகை சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகவும் உள்ளது.
எனவே, இந்த முடிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தையும் அரசாங்க தகவல் திணைக்களத்தையும் கடுமையாக வலியுறுத்துகிறோம். மேலும், அமைச்சரவை தீர்மானங்களை எவ்வித தடங்கலும் இன்றி அறிவிப்பதற்காக அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.
நாட்டில் ஊடக கலாசாரமொன்றை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து ஊடகவியலாளர்களும் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் தமது ஊடகங்களுக்கு எப்போதும் பொறுப்புடன் செயற்படுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சுயாதீன ஊடக அறிக்கையிடல் மற்றும் மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக தொழில்முறை இணைய ஊடக அமைப்பு தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்