ஜனாதிபதி தேர்தல் வந்தே தீரும் இல்லையெனில் நாடு இருள் மயமாகும்: ரிஷாட் பதியுதீன்

-மன்னார் நிருபர்-

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையிலே ஜூலை மாதத்திற்கு பின்னர் தேர்தலுக்கான வேலைப்பாடுகளை செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையகத்திற்கு உள்ளது.

ஒக்டோபர் மாதமளவில் தேர்தலை நடத்தியாக வேண்டும். இதைத்தான் எங்கள் அரசியலமைப்பு சொல்லுகின்றது. அதில் எந்த மாற்றங்களையும் செய்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை விவசாயிகளுக்கு இலவச விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் வந்தே தீரும். அதற்கு முன்னர் ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை வைக்கலாம் அவ்வாறு இல்லை என்றால் ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபரில் நடந்தே தீரும். இல்லை என்றால் எதிர் காலத்திலே இந்த நாடு இருள் மயமாகிவிடும்.

அதுமட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் எமது நாட்டை உற்று நோக்கி பார்த்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் வீழ்ந்து உலகத்திற்கு 50 பில்லியன் அளவில் கடன் செலுத்த வேண்டிய நாடாக இருக்கின்ற எமது நாட்டில் ஜனநாயக ரீதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகின்ற விடயத்தில் எந்த ஒரு கேள்விக்கு உட்படுத்தும் விடயமோ அல்லது நிறுத்தப்படுவதோ அல்லது வேறு சாட்டுக்களை சொல்வதோ முடியாத விஷயமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்தே கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம் அதனை தொடர்ந்து தற்போது வரை அதே கூட்டணியுடன் பயணித்து வருகிறோம். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுகின்ற போது எமது கட்சியின் உயர்பீடம் தேர்தலில் எந்த வேட்பாளரை தெரிவு செய்வது என்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.