சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதான வீதிகளில் மின் விளக்குகள் புனரமைப்பு

 

-அம்பாறை நிருபர்-

சாய்ந்தமருது பிரதான வீதியில் கடந்த பல வருட காலமாக ஒளிராமல் செயலிழந்து காணப்பட்ட பெரிய மின் விளக்கு தொகுதிகள் கல்முனை மாநகர சபையினால் தற்போது துரிதமாக திருத்தம் செய்யப்பட்டு, ஒளியூட்டப்பட்டுள்ளன.

குறித்த மின்விளக்கு தொகுதிகள் செயலிழந்திருந்தமையினால் சாய்ந்தமருது நகர பஸாரின் ஒரு பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், அண்மையில் இடம்பெற்ற சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியால் உறுதியளிக்கப்பட்டதற்கு அமைவாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது நுழைவாயில் (Gateway) சந்தி தொடக்கம் அல்ஹிலால் பாடசாலை சந்தி வரையான பிரதான வீதியில் செயலிழந்திருந்த மீயுயர் மின் கம்பங்கள் மற்றும் இணைப்புகள் திருத்தம் செய்யப்பட்டு, பிரகாசமான மின் விளக்குகள் புதிதாக பொருத்தப்படப்பட்டு, ஒளியூட்டப்பட்டுள்ளன.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை மாலை கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் நடைபெற்றது.

இதில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவும் கலந்து கொண்டிருந்தார்.

இவ்வாறு கல்முனை மாநகர பிரதான வீதியின் சில இடங்களில் செயலிழந்து காணப்பட்ட மின் விளக்கு தொகுதிகளும் புனரமைப்பு செய்யப்பட்டு, ஒளியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • Beta

Beta feature

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க