கொழும்பில் பாடசாலை அருகே கடத்தல் முயற்சி: தாயின் தைரியமான செயலால் முறியடிப்பு

கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை அருகே இடம்பெற்ற கடத்தல் முயற்சி குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பெண்ணொருவர் தனது மகளை பாடசாலையிலிருந்து அழைத்துச்செல்லும் போது அடையாளம் தெரியாத நபர் தனது காரில் நுழைந்து தன்னை வாகனம் ஓட்ட கட்டாயப்படுத்த முயன்றதாக புகார் அளித்துள்ளார்.

இதேவேளை தனது 8 வயது மகள் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் சந்தேக நபரிடமிருந்து தனது மகளை காப்பற்ற முயன்ற நிலையில் காரை முன்னோக்கி செலுத்த தான் மறுத்ததுடன் கூச்சலிட்டு அயலவர்களை உதவிக்கு அழைத்ததாக குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் குறித்த பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் குறித்த பாடசாலைக்கு அருகே அதே நபர் சுற்றித் திரிந்ததை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் இனம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இதேவேளை தகவல் தெரிந்தவர்கள் 011-2695411 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்