
ஊழல் வழக்கிலிருந்து கலிதா ஜியா விடுதலை!
ஊழல் வழக்கிலிருந்து பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையும் மற்றும் 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பங்களாதேஷ் பிரதமராக கலிதா ஜியா பதவி வகித்தார்.
இவர் தனது ஆட்சிக்காலத்தில் ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளையின் பெயரில் அரசாங்க நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனையும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரும் மேன்முறையீடு செய்தனர்.
ஆனால், மேன்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்து ( 10 ஆண்டுகள் சிறை )உத்தரவிட்டது.
இதையடுத்து கலிதா ஜியா இதனை மேன்முறையீடு செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், முந்தைய உத்தரவான 10 ஆண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் இரத்து செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
அத்துடன் பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது நிரூபணமாகியிருப்பதாக கூறி கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
கலிதா ஜியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக இந்த மாத ஆரம்பத்தில் லண்டனுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்