இலங்கையில் உணவுக்காக கடன் வாங்கும் பெருமளவு மக்கள்
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாக உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பின் ஆராய்ச்சி அதிகாரி ஷெஹாரி விஜேசிங்கவினால் கடந்த ஆண்டு (2024) மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள கொலன்னாவ மற்றும் மஹரகம பிரதேச செயலாளர் பிரிவுகள் உட்பட முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி, காலி, நுவரெலியா, கொழும்பு, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது 62 சதவீதம் பேருக்கு நிலையான வருமான ஆதாரம் இல்லை என்பதும், 57 சதவீதம் பேருக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த மாதிரியில் 35 சதவீத வீட்டு உரிமையாளர்களின் மாத வருமானம் 49,000 ரூபாவுக்கும் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வருமானத்தில் 42 சதவீதத்தை உணவுக்காகச் செலவிடுகிறார்கள், அதே நேரத்தில் 6 சதவீதம் மட்டுமே சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுகிறது.
மேலும், கல்விக்காக 9 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. கணக்கெடுக்கப்பட்ட குழுவில் 31.7 சதவீதம் பேர் உணவு வாங்க கடன் வாங்கியுள்ளதாகவும், தங்க நகைகளை அடகு வைப்பதன் மூலமோ, தங்களிடம் இருந்த சொத்துக்களை விற்பதன் மூலமோ அல்லது கடன் வாங்குவதன் மூலமோ உணவுக்கான பணத்தை தேடுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்