
அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது இலங்கை
ஏற்றுமதி மீதான பரஸ்பர தீர்வை வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை அமெரிக்காவுடன் சரியான நேரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிந்ததால், இப்பேச்சுவார்த்தையில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 180 நாடுகளுக்கு வர்த்தக வரியை அறிவித்தார்.
அதன்படி, அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதிக்கு 44 % வரி அறிவிக்கப்பட்டது.
பின்னர், சீனாவை தவிர ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதனையடுத்து இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்த பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்காவுடன் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடனான இரண்டு கலந்துரையாடல்களை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன், தற்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்