
வீட்டுப்பணிப்பெண்ணான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 37 வயது சந்தேகநபர் கைது
-அம்பாறை நிருபர்-
வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை, பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, தற்போது கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடந்த 15 ஆம் திகதி, குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக செயற்பட்ட போது, இரவு குறித்த சந்தேக நபர் தன்னை அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக, சிறுமி வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
