வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு

வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஓகஸ்ட் 19 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு மற்றும் திறந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இளைஞர் பேரவையின் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இளைஞர் பேரவையில் பெண் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இந்த வருடம் அந்த நிலைமை மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அந்த மாற்றத்தை இப்போது எல்லாத் துறைகளிலும் காணலாம்.

வரலாற்றில் முதல்முறையாக, தேசிய இளைஞர் பேரவையிலும் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.

இளைஞர்களின் வரலாற்றை ஆராயும்போது, இளைஞர் வன்முறை, இளைஞர் அமைதியின்மை மற்றும் இளைஞர் இறப்புகள் பற்றியே நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது, நாட்டுக்கு இளைஞர்களைப் பற்றிய ஒரு புதிய உரையாடல் தேவை.
அதற்கான தனித்துவமான வாய்ப்பும் பொறுப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார்.