வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு எதிராக அமைதிவழி போராட்டம்
-அம்பாறை நிருபர்-
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாட்டிற்கு எதிராக அமைதிவழி போராட்டம் ஒன்றினை நேற்று அப்பகுதி மக்கள் மேற்கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக வன ஜீவராசிகள் திணைக்களம் பாவித்து வந்த பல்தேவை கட்டடத்தை மீண்டும் மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் குறித்த பல்தேவை கட்டடமானது மக்கள் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இப்பகுதியில் கடந்த காலத்தில் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட யானை மனித மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில்,
தற்காலிகமாக கிராம அபிவிருத்தி சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளிற்கமைய வன ஜீவராசிகள் திணைக்களம் தங்களது பயன்பாட்டிற்கு பெற்றிருந்தது.
எனினும் கிராம அபிவிருத்தி சங்கமும் வேண்டுகோளினை ஏற்று தற்காலிகமாக வன ஜீவராசிகள் திணைக்கள பயன்பாட்டிற்கு வழங்கி இருந்தது.
எனினும் இன்று வரை பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் கிழக்கு மாகாண ஆளுநர் போன்ற திணைக்களங்களின் பல கடிதங்களை வழங்கிய போதிலும் குறித்த கட்டடத்தை மீளவும் மக்கள் பாவனைக்கு பெற்றுத்தர நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே தான் குறித்த கட்டடத்தை உடனடியாக மீண்டும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட வேண்டும் என கோரி கிராம மக்கள் அமைதிவழி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தங்களது கோரிக்கையை உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளார்கள்.
மேலும் சம்பவ இடத்திற்கு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சென்று கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.