லக்ஸ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற உத்தரவு
அரசாங்கத்திற்கு அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்ப கட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அப்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், குற்றப்பத்திரிகையில் பல திருத்தங்களைச் சேர்க்கவும் அனுமதி கோரினார்.
அதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருந்தது.
அதன் பின்னர், இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள் அடங்கிய ஒரு இறுவெட்டை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு வழங்கினார்.
அந்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குறித்த ஆவணங்கள் அச்சிடப்பட்ட பிரதிகளில் வழங்கப்பட்டால் அது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால், அவை ஒரு இறுவெட்டின் ஊடாக வழங்கப்பட்டதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனை அவதானித்த நீதிபதி பிரதிவாதிகள் ஏதேனும் ஆவணங்களை பிரதிகளாக கோரினால் அதனை வழங்குமாறு மனுதாரர் தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன் முதற்கட்ட விசாரணை ஆரம்பத்தின் போது பிரதிவாதிகள் தமது ஆட்சேபனை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில் வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.