யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் (-வீடியோ இணைப்பு-)

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது இன்று சனிக்கிழமை இரவு இனம் தெரியாத குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து குறித்த குழுவினர் சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது வரை கிடைத்துள்ள தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.