முத்து நகர் விவசாயிகள் நில அபகரிப்புக்கு எதிராக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் நில அபகரிப்புக்கு எதிராக தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
விவசாய காணிகளை சூரிய மின்சக்தி உற்பத்திக்கு தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதையடுத்து குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பி கொடு போன்ற பிரதான பதாகையை ஏந்தியவாறும் போராடி வருகின்றனர்.
இது தொடர்பில் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில் எவ்வித சாதகமான பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை 352 விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளனர்.
சுமார் 53 வருடங்களாக விவசாயம் செய்து வந்தோம் இதற்காக எங்களுக்கு மாற்று நிலமாவது தர வேண்டும்.
மேலும் தனியார் நிலங்களை ஏழு உரிமையாளர்கள் 272 ஏக்கருக்கு உரிமை கோருகின்றனர். இதில் தனியார் காணி என கூறி பொய்யாக உருதிகளை வழங்கி தாரை வார்த்துள்ளனர் இது தொடர்பில் காணி திணைக்களம் அரசாங்கம் ஊழல் மோசடி தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் அண்மையில் எங்கள் விவசாயிகள் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் இயந்திரம் வழங்கப்படவில்லை .எனவே அரசாங்கத்தின் மேலான கவனத்துக்கு இதனை நாம் கொண்டு வருகிறோம் எனவும் குறித்த விவசாய நிலத்தை அண்மித்த காணிகளில் ஏழு தனியார் நபர்கள் உரிமை கோருகின்றனர் இவர்களின் காணி உரிமங்களை பரிசீலனை செய்ய வேண்டும் இதில் ஊழல் மோசடி இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்கள்.