
மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
-மன்னார் நிருபர்-
மன்னார் பேசாலை கடலில், நேற்று வியாழக்கிழமை மாலை நீராடச் சென்ற 4 பேரில், மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக, மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காக சென்றுள்ளனர்.
நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன், மற்றைய இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்
அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, காணாமல் போன இருவரில் ஒருவர் மீட்கப்பட்டு, மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காணாமல் போயிருந்த மற்றைய இளைஞனின் சடலம், நேற்று வியாழக்கிழமை இரவு கரை ஒதுங்கிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் கிராமங்களை சேர்ந்த, 16 முதல் 18 வயதுடையவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
