மட்டக்களப்பில் யானை தாக்கி இளம் தாயார் உயிரிழப்பு 3 வயது குழந்தை உயிர்பிழைப்பு
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மகிழவெட்டுவானை சேர்ந்த ரவிச்சந்திரன் பசுபதி (வயது-35) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதிக்குள் ஊடுருவிய காட்டு யானை பல வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தியதுன் மகிழவெட்டுவான் கிராமத்தின் கல்குடா பகுதிக்குள் ஊடுருவிய போது முற்றத்தில் தனது குழந்தையுடன் இருந்த தாயும் அவரது குழந்தையும் யானையைக் கண்டு வீட்டிற்குள் புகுந்த நிலையில் அவர்களை துரத்திச் சென்ற யானை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.
இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தையும் மீட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.