பெரும் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகளை பறிகொடுத்த பண்ணையாளர்கள்!

மகாவலி அல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால், கால்நடைகள் பெருமளவில் உயிரிழந்துள்ளதாக, கால்நடைப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த பண்ணையாளர்கள், இந்த இயற்கைச் சீற்றத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, பண்ணையாளர்களுக்குச் சொந்தமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தில் சிக்கிய சில கால்நடைகள் நடக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் மேலும் இந்த எதிர்பாராத இழப்பு காரணமாகப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.

கால்நடைப் பண்ணையாளர்கள் மேலும் தெரிவிக்கையில், தங்களுக்கு இதுவரை அரசாங்கத்தால் நிரந்தர மேய்ச்சல் தரை ஒதுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

“கால்நடைகளைத் தொடர்ந்து பாதுகாப்பாக வளர்ப்பதற்கும், இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து அவற்றைப் பாதுகாப்பதற்கும் நிரந்தரமான மேய்ச்சல் தரை ஒதுக்கீடு மிகவும் அவசியம்,” என அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்றும் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனப் பண்ணையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.