
பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்திய பல்கலைக்கழக மாணவர்கள்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.தேவப்பிரிய (வயது – 42) என்பவரே இதன் போது காயமடைந்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் இவர், நேற்று சனிக்கிழமை காலை பல்கலைக்கழக மைதானத்தில் அமைந்துள்ள விடுதியில் உறங்கிக் கொண்டிருந்தார்.
இதன்போது மாணவர்கள் குழு ஒன்று அவரை எழுப்பி வெளியே அழைத்துச் சென்று மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றி பல்கலைக்கழகத்தின் உடல் நல மையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
