பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டுப் பெறாத பயணிகள் மீது நடவடிக்கை

மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டுப் பெறாத பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தை மீறும் நடத்துனர்கள் 3 நாள் இடைநீக்கம் மற்றும் அபராதம் விதிக்கப்படுவார்கள், அத்துடன் பயணச்சீட்டுக்களைத் தங்கள் வசம் வைத்திருக்காத பயணிகளும் அபராதம் செலுத்த வேண்டும்.

மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்குவது கடந்த மாதம் 1 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 14 நாட்களில், பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவது முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில், பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கும், பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்களுக்கும் மட்டுமே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.

இருப்பினும், சட்டத்தை மீறும் பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிரான சட்ட அமுலாக்கம் நேற்று புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.