நிவாரணப் பொருட்கள் திருட்டு – காவல்துறை தீவிர விசாரணை

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவிருந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 55 பொதிகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் – கற்பிட்டி மண்டலகுடா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், மண்டலகுடா கிராம உத்தியோகத்தர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களினால் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விநியோகிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய 181 பொதிகள் அந்த பகுதியிலுள்ள வீடொன்றில் வைக்கப்பட்டதாக, கிராம உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, சுமார் 220,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளே திருடப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.