நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நாமல் ராஜபக்ஷவும் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

இந்த விசாரணை தொடர்பாக சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.

அதன்படி, வழக்கை ஜனவரி 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த நீதிபதி, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் குறித்து நினைவூட்டல்களை அனுப்பவும் உத்தரவிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, நாமல் ராஜபக்ஷ உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் மேற்படி முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.