தேனீக்களை உளவாளிகளாகப் பயன்படுத்தும் முயற்சி!
தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப்பட்டாலும், தேனீக்களை உளவாளிகளாகவும் பயன்படுத்த முடியும்.
உயிரினங்களைக் கருவிகள் வாயிலாகக் கட்டுப்படுத்தும், ‘சைபோர்க்’ (Cyborg technology) என்ற தொழில்நுட்பம் தொடர்பாகப் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.
இந்த வகையில், தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, 74 மில்லி கிராம் எடையுள்ள சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர்.
அவற்றில் உள்ள சிறிய ஊசிகள், தேனீயின் மூளையைக் கட்டுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எந்த இடத்திலிருந்தும், குறித்த தேனீக்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும்.
இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில், விஞ்ஞானிகளின் உத்தரவுகளில், 90 சதவீதத்தைத் தேனீக்கள் நிறைவேற்றி உள்ளன.
இதற்கமைய பேரிடர் காலங்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களின் போது, மனிதர்கள் உடனடியாக செல்ல முடியாத இடங்களுக்கு, இது போன்ற தேனீக்களை அனுப்பி, அங்குள்ள நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.