சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதியின் கைகளால் பதக்கங்களைப் பெற்றார்கள்
சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் பற்றிய அறிவுள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்களை வழங்கி அவர்களைப் பாராட்டுவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சு இணைந்து, சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்கின்றன.
இம்முறை 11ஆவது தடவையாக நடைபெற்ற சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவில், 192 சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடமிருந்து ஜனாதிபதி பதக்கங்களைப் பெற்றனர்.
பாடசாலை மாணவர்களை சுற்றுச்சூழல் முன்னோடிகளாக பயிற்சி அளித்த ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
2025 சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழாவிற்காக தொகுக்கப்பட்ட சிறப்பு நினைவு மலரும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த விழாவில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி, சுற்றாடல் மாசடைவதன் பாதகமான விளைவுகளை இன்று முழு உலகமும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். நமது இளமைக் காலத்தில் அனுபவிக்காத, மனித செயல்பாடுகளால் தற்போதைய தலைமுறை அனுபவிக்க வேண்டியுள்ள, சுற்றாடல் அழிவை மாற்றியமைத்து அனைத்து உயிரினங்களுக்கும் சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முதன்மையான கவனம் செலுத்தும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறிய அமைச்சர், அதன் முக்கிய திட்டங்களில் ஒன்றான Clean Sri Lanka வேலைத் திட்டம் தற்போது வலுவாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இயற்கைக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான சமநிலையைப் பேணி மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் திட்டம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்கால சந்ததியினருக்கு இன்று வாழும் சூழலை விட ஆரோக்கியமான பசுமையான சூழலை விட்டுச் செல்லும் திட்டத்தில் வலுவான முன்னோடிகளாகச் செயல்படுமாறு பதக்கம் வென்ற அனைவரையும் கேட்டுக்கொண்டார்.