
சீரற்ற வானிலை காரணமாக மன்னாரில் இரண்டு பேர் உயிரிழப்பு!
-மன்னார் நிருபர்-
நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை இரண்டு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பஸ்தர் ஒருவர் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குறித்த நபர் அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் மீண்டும் அங்கு சென்ற வேளையில் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய வயோதிபர் தனது விவசாய நிலத்தின் பாதுகாப்பு கருதி குஞ்சிக்குளம் கிராமத்தில் இருந்து சென்ற வேளையில் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக வும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன் வயலுக்குச் சென்ற ஏனையவர்கள் குஞ்சிக்குளம் கிராமத்துக்கு பாதுகாப்பாக திரும்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
