
சர்வதேச நாணய நிதியத்தின் 6வது தவணை விரைவில்!
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான 6வது கட்ட கடன் தொகையானது அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்குக் கிடைக்கும் என அதன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, 6 வது கடன் தவணையான 350 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக இராஜதந்திர தூதுக்குழுக்கள், இருதரப்பு மற்றும் பலதரப்பு அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களை ஒன்றிணைத்து நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அனர்த்தத்திற்கு முகங்கொடுத்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து விரிவான நீண்ட கால மீளமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது வரையிலான அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்தி, சூறாவளியால் நாட்டின் அனைத்து துறைகளுக்கும் ஏற்பட்ட பரந்த அளவிலான சேதங்கள் தொடர்பான மேலோட்டமான ஆய்வொன்றை திறைசேரி செயலாளர் இதன்போது முன்வைத்தார்.
பொருளாதாரத் துறையின் சுருக்கம் மற்றும் உள்நாட்டுக் கடன் பெறுவதற்கு நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட இடைவெளி காரணமாக ஏற்படும் வரையறைகளைக் கருத்திற்கொண்டு, வெளிநாட்டு நிதி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மத்திய வங்கி ஆளுநர் இதன்போது வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
இந்தத் தீர்க்கமான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர், நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 6வது தவணை விரைவில் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.
