கொவிட் அச்சுறுத்தல் : பிசிஆர் பரிசோதனை அதிகரிப்பு!

உலகளாவிய ரீதியில் புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சில வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைகளை சுகாதார அமைச்சு அதிகரித்துள்ளது.

பிசிஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகள் தற்போது கொவிட் -19 நோயாளிகளைக் கண்டறிய எச்சரிக்கையுடன் செயற்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் தொடர்பில் அனுமதிக்கப்படும், சிகிச்சை பெறும் நோயாளிகளின் கண்காணிப்பை அதிகரிக்க வைத்தியசாலைகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் எனவும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது எனவும் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.